வியாழன், 17 நவம்பர், 2016

வட்டார வழக்கு

வட்டார வழக்குகள் தான் பல சொற்களைக் கட்டிக்காத்து வருகின்றன என நினைக்கிறேன்.

எ.கா:
1. கைமாத்து -  கைம்மாறு.
2. தொறப்புக்குச்சி - திறவுகோல். (தொறக்கிறது ~ திறக்கிறது)
3. பசியாத்து - பசியாற்று 
4. உறம்பற - உறவினன்  
5. பழமை - கதை (என்ன பழமை பேசிக்கிட்டு இருக்கீங்க என்றால் என்ன கதை பேசிகிட்டு இருக்கீங்க என்று பொருள்)

நான் நகரத்திற்கு நகர்ந்த பின், இப்படி பல வட்டாரச் சொற்களையும் வட்டார மொழி நடையையும் இழந்துவிட்டேன். 


செவ்வாய், 15 நவம்பர், 2016

வீழுநர்

வீழுநர் என்பது தான் எவ்வளவு அழகான சொல். காதலில் வீழ்ந்தவர் (விழுந்தவர்), காதலில் தொபுக்கட்டீரென தலைக்குப்புற விழுந்தவர் :)

இதோ இக்குறளில் வள்ளுவர் எப்படி கையாண்டிருக்கிறாரென பாருங்கள்:

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழ்நர் கண்ணே இனிது.

சொற்பொருள்:
புலவி - ஊடல்
வீழுதல் - விழுதல்,  ஆசை, ஆசைப்பெருக்கம்.
விழுதல் -விருப்பங்கொள்ளுதல்.
வீழுநர் - விருப்பம் கொண்டவர். (அனுப்புதல் - அனுப்புநர், இயக்குதல் - இயக்குநர் அது போல)

புலவி கூட எங்கே இனிக்கும், இன்பம் பயக்கும் எனத் தெரியுமா? எப்படி நிழலுக்கு அருகே இருக்கும் நீர், குளிர்ந்த தண்ணீராய் பருக இனிக்கிறதோ, அது போலத் தான் அன்பிற்கினிய காதலருடன் கொள்ளும் ஊடல் தான் இன்பமானதாக இருக்கும். 

திங்கள், 7 நவம்பர், 2016

சீராட்டு

கொங்கு வட்டார வழக்கில் சீராட்டு என்றால் கோபம். "சீராட்டு வந்து உக்கார்ந்துருக்கா" என்று சொல்வதுண்டு.

சீராட்டு - கோபம்.

சீராட்டி பாராட்டின்னு கேள்விப்பட்டதில்லை? கோபத்துல மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா, வேடிக்கைப் பார்த்துக்கிட்டு போகக்கூடாது, அதுவும் பெண்ணா இருந்தா, சீராட்டணும் (கொஞ்சணும்), இல்லனா பெண் பாவம் பொல்லாதது :).

நோட் பண்ணிக்கோங்க.. நோட் பண்ணிக்கோங்க.

அது நிற்க.

கொஞ்சுதல் என்றால் நிரம்பாப்  பேச்சு, சிறிது பேசுதல் (கொஞ்சமாக பேசுதல்).

அதானே கொஞ்சும் போது பேச்சு எதற்கு. பின்னணியில் - "சொல்வது குறைவு, செய்வது அதிகம், செயற்புயல் நானடி" என்று பாடல் கேட்கிறதா. ;)

கரடி என்று தள்ளு

பாவேந்தரின் கட்டுரைகளை படித்துக்கொண்டிருக்கையில் "அவர்  உரை கரடி என்று தள்ள வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

என்னாது - கரடியை தள்ள வேண்டுமா என்று அலற வேண்டாம் :)

கரடி என்றால் புரட்டு (பொய், புரட்டு)

இதை சிவாவிடம் சொல்லும் போது, அருகில் இருந்த பூரணி, "அப்ப அதை foxன்னு தானே சொல்லணும், (அது தானே தந்திரமானது / cunning), ஏன் கரடின்னு சொல்லுறாங்க. கரடி பொய் சொல்லுமா", என்கிறாள். :), அதானே?

குறிப்பு:
நண்பர் உதயகுமார் பகிர்ந்த - ஒரு நரியின் மனக்குமுறல் :)
http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=10250709&week=oct2507

தீந்தா - Ink

தீந்தா - Ink

இறகு தொட்டு எழுதுவதற்கான வண்ண நீர், ஆங்கிலத்தில் இங்க் (ink).

தீண்டு என்பதன் திரிபாகத் தீந்தா ஆனது.

தீண்டு - இறகால் தீண்டப்படுவது.

தரவு - http://www.bdu.ac.in/bharathidasan/resources/katturaigal/VANTHAVAR_MOZHIYAA_SENTHAMIZCH_SELVAMAA_71_86.pdf

கலுழ் - கலுழ்தல் - கலுழன்

கலுழ் - அழுகை
கலுழ்தல் - கண்ணீர் கசிவது
கலுழன் - கருடன் (கருடன் கண் கலங்கிய வண்ணம் காட்சியளிப்பதால்  - காரணப் பெயராம்)

இன்று திருக்குறள் காமத்துப்பால் படித்துக்கொண்டிருந்தேன், கண்விதுப்பழிதல் அதிகாரத்தில் கலுழவது/கலுழும் என்று கண் கலங்குதலைப் பற்றி இருந்தது. சரி கலுழ்* என்றால் கண்ணீர் என்று நினைத்துக்கொண்டுவிட்டேன்.

மாலை பாவேந்தம் படிக்கையில் கலுழன் பற்றி படிக்க நேர்கையில், மீண்டும் கலுழ்* வர அகராதியைப் புரட்டினேன்.

### "தட் கண்ணுல மழை வர மொமெண்ட்"க்கு தமிழில் - கலுழ்தல்

பலபம்

பலபம் - நாம சிலேட்டில் எழுத உபயோகிக்கிற அதே பல்பம் தான்.

பலபம் - பலகை என்ற சொல் ஈறு திரிந்த ஓர் ஆகுபெயர், பலகை - கற்பலகை;
அதன் துகள் குழைத்துச் செய்த கற்குச்சி  - பலபம் 

தொடாமலே சுடுவது

தொட்டால் சுடும் நெருப்பிற்கு நீங்கினாலும் (தொடாமலே) சுடும் வித்தை/சாகசம் தான் தெரியுமா? அப்படி தொடாமலே சுடுவது எது எனத் தெரியுமா?

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல 
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

வெள்ளி, 4 நவம்பர், 2016

படம் - வேர்ச்சொல் அறி

 Movie என்பதற்கு படம் என்ற பொருள் எப்படி வந்ததென தெரியுமா?

படம் என்றால் சீலை. முன்னெல்லாம் சீலையில் தானே வரைவார்கள், அதனால் அதற்கு படம் என்று பெயர் வந்திருக்கும். திரைப்படம் கூட (திரைச்)சீலையில் தானே காட்டுவார்கள் என்று ஊகித்திருந்தேன்.

ஆனால்,

படு + அம் = படம். படம் என்பதில் வேர்ச்சொல் "படு". படு என்றால் ஓவியனின் மனத்திலுள்ளது ஏட்டில் படுவது என்று பொருள். படம்/படல் - தொழிற்பெயர், தொழிலாகுபெயராய்ப் படமாகிய பொருளை உணர்த்துகிறது.

http://www.bdu.ac.in/bharathidasan/resources/katturaigal/VANTHAVAR_MOZHIYAA_SENTHAMIZCH_SELVAMAA_71_86.pdf

நன்றி - நண்பர் உதயகுமார்.

வியாழன், 3 நவம்பர், 2016

திருக்குற்றால குறவஞ்சியும் திரைப்படப் பாடல்களும்

திருக்குற்றால குறவஞ்சியும் திரைப்படப் பாடல்களும்

இதை உரக்க படிக்கும் போது மனதில் வந்து போன திரைப்பட பாடல் வரிகள்:

#1.
கண்ணுக்குத் கண்ணிணை சொல்லத் திரிகூடக்      
    கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
      
பேடையன்னம் போலவே வந்தாள்.
                                                      [வசந்தவல்லி வருதல்]


பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

#2.
இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ                        
   மோகினியோ                           மன                   
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய                        
    தோவெனவே                          உயர்                   
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி                       
   வீதியிலே                            மணிப்                   
பைந்தொடி நாரி வசந்தஒய் யாரிபொற்                          
   பந்துகொண்                        டாடினளே.
                                                    [வசந்தவல்லி பந்தடித்தல் ]


காதலன் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியிருப்பார். பாடலுக்கும் காட்சிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை, ஆனாலும் கேட்டு ரசிக்கவைக்கும் பாடல்.


#3.


இடை சங்கதம் என்று [வசந்தவல்லி பந்தடித்தல் ]

இடையா அது இடையா அது இல்லாதது போல் இருக்குது

#4. 

முனிபரவும் இனியானோ-வேத

   முழுப்பலவின் கனிதானோ

கனியில்வைத்த செந்தேனோ-பெண்கள்

   கருத்துருக்க வந்தானோ

தினகரன்போற் சிவப்பழகும்-அவன்

   திருமிடற்றிற் கறுப்பழகும்

பனகமணி இருகாதும்-கண்டால்

   பாவையுந்தான் உருகாதோ


அன்பே நீயென்ன அந்த கண்ணனோ மன்னனோ; தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

#5.
         தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்

   தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே

பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்

   பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே;  [வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்]

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை 

#6.
பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே;  [வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்]

இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ.

#7.
வல்லைநிகர்முலை இல்லைஎனும்இடை

   வில்லை அனநுதல் முல்லைபொருநகை

வல்லிஎனஒரு கொல்லி மலைதனில்

   வல்லிஅவளினும் மெல்லி இவள்என

ஒல்லி வடகன டில்லி வரைபுகழ்

   புல்லி வருகுறி சொல்லி மதுரித

நல்ல பனிமலை வல்லி குழல்மொழிச்


   செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற; (வஞ்சி[குறிசொல்லும் குறத்தி வருதல்]

ஒல்லி பெல்லி :) :)

#8.
வளமைபெறுஞ் சதுரயுகம் கிழமைபோல் வழங்கும் (குறத்தி வசந்தவல்லிக்குத் தலமகிமை கூறுதல்)

ஒருகணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ (இப்பாடலில் நான்கு யுகங்கள் கூட நான்கு நாட்கள் போல இருக்குமாம், நாள் கழியவில்லையே என்று வெறுப்புத் தோன்றாது, இன்பமாக இருக்குமாம்)

#9. 
காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே!  (குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்)
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு 

திருக்குற்றாலக் குறவஞ்சி - ரசித்த வரிகள்

நான் ரசித்த சொல் நயம்/பொருள் நயம் மிக்க வரிகள்-

அலையிலே மலைமிதக்க (கடவுள் வணக்கம்  - சைவசமயாசாரியர் நால்வருள் மூவர்)

பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப் பசியாதோ தென்றலைத்தான்
புசியாதோ என்பர் (உலாக்காணவந்த பெண்கள் சொல்லுதல்)


குழை ஏறி யாடி நெஞ்சைச் சூறை யாடும்விழிக் கெண்டையாள் (வசந்தவல்லியினது அழகின் சிறப்பு) 

துடிக்குள் அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள் (வசந்தவல்லியினது அழகின் சிறப்பு)

பையை விரிக்கு தம்மா பாம்புசும்மா (வசந்தவல்லி வியந்து கூறுதல்)


பெண்கள் கருத்துருக்க வந்தானோ (தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல் )


வாகனைக்கண்டுருகுதையோ ஒரு மயக்கமதாய் வருகுதையோ (தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி காதல் கொள்ளுதல்)

சங்க வீதியிற் சங்கம் தோற்றாள்  (வசந்தவல்லி நிலைமைகண்டு தோழிமார் புலம்பல்)

விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் 
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பர்  (வசந்தவல்லி நிலைமைகண்டு தோழிமார் புலம்பல்)

கருகு தேயுடல் உருகுதே (வசந்தவல்லியைப் பாங்கிகள் உபசரித்தல்)

தண்ணிலாக் கொடும்பாவி வெண்ணிலாவே (வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்)

நித்திரை தானொரு சத்துரு வாச்சுதே (வசந்தவல்லி மன்மதனைப் பழித்துரைத்தல் )

மெய்யர்க்கு மெய்யர் (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)

குளிர் திங்கட்கொழுந்தையும் தீக்கொழுந்தாக்கிக் கொண்டேனே   (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)


சங்கக் குழையாரைச் சங்க மறுகினிற் கண்டுஇரு செங்கைக்குள் சங்கமுஞ் சிந்தி மறுகிவிட்டேனே (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)

சிறு தென்றற் குழவி தினங்கோட்டக் கொட்ட நொந்தேனே (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)

வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரைக் கண்டு சிந்தை நள்ளிய திங்களை ஞாயிறு போலக் கண்டேனே (வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்)

அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் எனது மனதில் அஞ்சு தலைக்கோர் ஆறுதலைவையார் (வசந்தவல்லி வருந்திக் கூறுதல்)


வந்தால்இந் நேரம்வரச் சொல்லு வரா திருந்தால்
மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர்
தந்தாலென் நெஞ்சைத்தரச் சொல்லு தராதி ருந்தால்
தான்பெண் ணாகியபெண்ணை நான்விடேன் என்று (வசந்தவல்லி, பாங்கியைத் திருக்குற்றாலநாதர் முன் தூதுனுப்புதல்)

கஞ்சனைமுகில் மஞ்சனை நொடித்தவர் 

    காமனைச்சிறு சோமனை முடித்தவர் (வசந்தவல்லி கூடலிழைத்தல்)

ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கும் மாரிநீர் வளர் (குறிசொல்லும் குறத்தி வருதல்)

குழல் வாய்மொழி அருட்கண்
கோலவண் டிணங்குங் கொன்றைமா லிகையான் 
(குறிசொல்லும் குறத்தி வருதல்)


வஞ்சி எழில்அப ரஞ்சி வரிவிழி

   நஞ்சி முழுமற நெஞ்சி  (குறிசொல்லும் குறத்தி வருதல்)

நீடுமலைமயில் ஆடு மலைமதி
   மூடு மலைதிரி கூடமலைக்குற. (வஞ்சி(குறிசொல்லும் குறத்தி வருதல்)

துவளும் இடைத் தவள நகை பவள இதழ்த் தையலே  (வசந்தவல்லி குறத்தியைக்கண்டு மலைவளங் கேட்டல்)


தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் (குறத்தி மலைவளங்கூறுதல்)

அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்  (குறத்தி மலைவளங்கூறுதல்)

காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே!  (குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்)

கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே (குறத்தி சொல்லுதல் - பாடல் 79)

ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல்
   ஒளிபோட்டு நரிபோற் பம்மிக்  

கூளிபோல் தொடர்ந்தடிக்கும்  (சிங்கன் தன்வலிமை கூறுதல்)

சென்னியி லேபுனற் கன்னியை வைத்த (சிங்கன், பறவைகள் வரவு கூறுதல் )

கண்ணிற் கண்டிடம் எல்லாம் அவளாகத் தோணுதே பாவியே (சிங்கன், சிங்கியை நினைத்துப் புலம்பல்)

வவ்வால் பறக்க மரநாய் அகப்பட்ட வைபவம் ஆச்சுது தானே(சிங்கன், சிங்கியைத் தேடிக் காணாமல் வருந்துதல்)

ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்காற் கூடிக் கொள்ள.   (சிங்கன், சிங்கியைக் காணுதல்)

கண்டாடித் துள்ளாடிக் கள்ளாடும் தும்பியைப் போற்
  கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டானே   (சிங்கன், சிங்கியை மகிழ்வித்தல்)

ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா!   (சிங்கனும் சிங்கியும் எதிர்த்துரையாடல்)

திருக்குற்றாலக் குறவஞ்சி - புதிய சொற்கள்

திருக்குற்றாலக் குறவஞ்சி படிக்கும் போது தெரிந்து கொண்ட புதிய சொற்களும் அவைகளின் பொருளும்:


நறை - கள், தேன், மணம்
தாமம் - பூமாலை
தகை - அழகு, தகுதி, பெருமை
உரி - தோல்
கள் - மது, தேன், வண்டு 
கரி - யானை 
நறை - கள், தேன், மணம் 
தாமம் - பூமாலை
தகை - அழகு, அன்பு, குணம், தகுதி, பொருத்தம்
விளை - நரம்பு
ஞாளி - நாய்
மடவார் - பெண்டீர்
இறும்பூது - வியப்பு, பெருமை
தரளம் - முத்து
தவளம் - வெண்மை (தவளமதி)
முத்தர் - திடர் (முத்தர் திருமேனி)
மறி - மான் (மறியெழுந்த கரம், எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம்)
மழவு - இளமை (பவனி வந்தனரே - மழவிடைப், பவனி வந்தனரே)
விடை - எருது
மழு - கோடரி (மழு விரித்த தொருகரம்)
அடல் - வலிமை (அடல்கு லாவிய தோகை வாகனத்தரசு)
கனகம் - பொன்
சேல் - கொண்டைமீன் (செலேருங் கலகவிழி)
சிலை - வில் (புருவநெடுஞ் சிலைகள்)
மால் - மயக்கம், ஆசை  (மாலேறப் பொருதும்)
நிருபன் - அரசன்
சநு - உதவி (சநுப்பொற் காட்டி)
சூடகம் - கைவளை (கையாரச் சூடகம்  இட்டு)
வல்லி - படர் கொடி
கமுகு - பாக்குமரம் (கமுகை வென்ற கழுத்தினாள்)
தொய்யில் - வரிக்கோலம் (மகளிர் உறுப்புகளின்) எழுதும் சந்தன குழம்பு
துடி - உடுக்கை (துடிக்குள் அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள்)
தட - பெரிய
பணைப்பு - பருமை
நத்து - சங்கு (நத்தணி கரங்கள்)
வண்டு - கைவளை (செங்கையில் வண்டு கலின்கலின் என்று)
அடர் - நெருங்கி
சங்கதம் - ஐயம்/சந்தேகம் (இடை சங்கதம் என்று)
மங்குல் - மேகம் (குழல் மங்குலில் வண்டு கலைந்து)
தேறல் - தேன்
மாந்தி - பருகி (நன்மொழித்  தேறல் மாந்தி)
பன்னகம்  - பாம்பு (பனகமணி இருகாதும்)
வாகன் - அழகன் (வாகனைக்கண் டுருகுதையோ)
தமனியம் - பொன் (தமனிய மாடஞ் சேர்த்து)
கலாவினாள் - கோபம் கொண்டாள் (பெரு நிலாவினொடு கலாவினாள்)
ஆகடியம் - அநியாயம் (ஆகடியஞ்  செய்தல்லவோ வெண்ணிலாவே)
வேகம் - சினம்
பன்னி - பத்தினி  / மனைவி
வாகு - அழகு (வாகுகுழல் பின்னல்)
மௌலி - தலை, சடை (தண்ணிலா மௌலிதந்த மையலா)
பிடி - பெண்யானை
மறுகு - தெரு (சங்கக் குழையாரைச் சங்க மறுகினிற் கண்டு)
மன்றல் - திருமணம்
குழவி - இளமை
கலை - ஆடை (கைம்மானைக் கண்டு கலையை நெகிழவிட்டேனே)
வியாளம் - பாம்பு (வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரைக் கண்டு)
துரை - மிகுதிப்பாடு
வரை - மலை (வரைப்பெண்ணுக் காசை பூண்டு)
இக்கு - கரும்பு (வல்லிக்கு வல்லி பேசி - வல் இக்கு வல்லி பேசி)
சிலைவேள் - மன்மதன் (சிலை - வில், கரும்பை வில்லாக கொண்ட வேள் - ஆண்)
மருமாலை - கொன்றைமாலை
கஞ்சன் - பிரமன்
சோமன் - சந்திரன்
குஞ்சரம் - யானை
ஆடல் - வெற்றி (ஆடல் வளை வீதி - வெற்றி பொருந்திய வீதி)
மறுகு - தெரு
மடக்குருகு - இளநாரை (குருகு - விலங்கு முதலியவற்றின் இளமை, நாரை)
வாரி - வெள்ளம்
கதலி - ஒரு வகை வாழை
மருப்பு - கொம்பு
சேவகம் - வீரம்
மருங்கு - இடை (மருங்கிற் சாத்திய கூடையும்)
கமனித்தல் - போதல் 
நுதல் - நெற்றி
மதர் - மகிழ்ச்சி
அபரஞ்சி - புடமிட்ட பொன்
அமலன் - குற்றமற்றவன், கடவுள்
கொம்மை - வட்டம், திரட்சி, இளமை, அழகு, மார்பு
கோகிலம் - குயில் (குரங்கும் கூட:))
முழை - மலைக்குகை
எல் - சூரியன் (எல்லுலவும் விந்தைமலை)
செல் - மேகம் (செல்இனங்கள் முழவுகொட்ட)
முழவு - மத்தளம் 
வெருவு - அச்சம் 
மேதி - எருமை 
மூரல் - பல் , புன்சிரிப்பு 
மகம் - வேள்வி 
சாபம் - வில் 
இந்திர சாபம் - இந்திரனுடைய வில் - வானவில் 
ஆகு - எலி, பெருச்சாளி (ஆகுவாகனத்தான் - பிள்ளையார்)
ஏனம் - பன்றி (ஏனஉருவார் - பன்றி உரு எடுத்த திருமால்)
தென் - அழகு 
பிளவு - பாக்கு (தின்னஇலை யும்பிளவும் அள்ளித்தா)
சரம் - மூச்சு 
முதாரி - முன்கை வளையல் 
ஏழை - பெண் (ஏழைபங்கர் - சிவன்)
வெற்பு - மலை 
களபம் - கலவை (களபகத் தூரியோ - களபக் கஸ்தூரியோ)
கை - சிறுமை, கையளவு (கை மயக்கம் - சிறு மயக்கம்)
பணி - நாகம் (பணியாபரணம் பூண்ட) 
வெருட்சி - அச்சம், மருட்சி 
சன்னை - சாடை, குறிப்பு, சமிக்கை 
இதழி - கொன்றை (இதழிமாலை - கொன்றைமாலை)
மாலை - பாசம் (மாமாலை - மிகுந்த அன்பு)
வங்கணம் - காதல், நட்பு
வக்கா - கொக்குவகை, சிப்பிவகை  
தூணி - அம்புக்கூடு (அம்பறாத் தூணி)
உறுக்கு - அதட்டு (கோபத்தில் அதட்டுதல்)
சில்லி - வட்டம் (சில்லிக்கோல் - வளாரிக்கம்பு - வளைந்த தடி )
ஆளி - சிங்கம்  
சுரும்பு - வண்டு (சுரும்பிசை - வண்டின் இசை)
கூளி - பேய் 
புறவு - காடு 
கின்னரம் - யாழ்
கலி - வஞ்சகம்
மட்டு - கள் (மட்டீவாய் - மட்டு - ஈ- வாய் -- கள் குடித்ததால் ஈக்கள் மொய்க்கின்ற வாய்)
பாவகம் - இயல்பு, இயற்கை
கேகயம் - மயில்
மானவன் - மனிதன், பெருமையுடையோன் ; அரசன் ; படைத்தலைவன் ; வீரன் 
பண்ணவர்(பண்ணவன்) - கடவுள், தேவன் 
கொக்கு - குதிரை 
கொக்கு - மாமரம் 
சாறு - திருவிழா 
கூனி - இறால் 
கெம்புதல் - உரத்துப் பேசுதல் 
வாவி - கிணறு, நீர்நிலை, ஆற்றோடை 
மட்டு - மணம் (மட்டார் குழலி)
மின்னார் - அழகிய பெண்டீர் 
வருக்கை - வேர்ப்பலா 
கருக்கை - கொன்றைமரம் 
வாமம் - தீமை 
காசலை - அக்கறை; மனஒருமிப்பு
தாலம் - பூமி 
படம் - சீலை 
கங்காளம் - எழும்பு, முழு எழும்பு,  எழும்புக்கூடு
தூக்கணம் - தொங்கல்  (தூக்கணங்குருவி :))
கடம்-மதம்

புதன், 2 நவம்பர், 2016

தேடல்

செடிக்கொரு வளையம் போட்டுச் சிங்கியைத் தேடு வாயே (திருக்குற்றாலக் குறவஞ்சி - நூவன், சிங்கனைப் பழித்தல்)

அந்த காலத்திலேயே செடியை (மரத்தை) சுற்றிச் சுற்றி வந்து பாடுவாங்க/தேடுவாங்க போல. :)

அழகிய கற்பனை

அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
யானைகள் திங்களைத் தாம் உண்ணும் கவள உருண்டையென எண்ணி அது செல்கின்ற வான்வழியில் போகவிடாமல் தடை செய்யும் 
#### என்னவொரு கற்பனை!

கொக்கை அவித்தொரு சட்டியில் சாறாக வைத்து

மீறும் இலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
   வேட்குற வன்முதல் வேட்டைக் குப்போனநாள்
ஆறுநாட் கூடீ ஒருகொக்குப்பட்ட
   தகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
   தாமும்கொண்ட டார்சைவர் தாமும்கொண் டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
   பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே.  

[கண்ணிகொண்டு வாடா குளுவா! கண்ணிகொண்டுவாடா]

திருக்குற்றாலக் குறவஞ்சியில் "சிங்கன், குளுவனைப்பார்த்துக் கண்ணிகொண்டு
வரச்சொல்லுதல்" பாடலில் வருவது.



"கொக்கை அவித்தொரு சட்டியில் சாறாக வைத்தபின் வேதப் பிராமணர் தாமும் கொண்டடார் சைவர் தாமும்கொண்டார் தவப்பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார்"

இது ஒரு சிலேடை.

இதை அப்படியே படித்தால் வரும் அர்த்தம் நமக்கு புரியும். அதாவது சிங்கன் என்கிற வேடன் அவன் தோழன் குளுவனிடம் சொல்லுவதாக வரும் பாடல். வேட்டையாடுவது ஒன்றும் தப்பில்லை, (இதற்கு முன் வரும் சில வரிகளில் சொல்லுவான்) கடவுள்கள் எல்லாம் வேட்டையாடித்தான் பறவைகளை (அன்னம், பருந்து), விலங்குகளை (பெருச்சாளி,மயில்) தம் வாகனங்களாக கொண்டுள்ளனர். இதோ பார், முருகன் வள்ளியை மணமுடித்ததால், அவனும் குறவனே, அவன் வேட்டைக்கு போய் ஆறு நாட்களுக்குப் பின் ஒரு கொக்கை பிடித்துவந்து, அதை சட்டியில் அவித்து(சமைத்து) சாறாக வைத்த பின்  (குழம்பாக வைத்த பின்), வேதப் பிராமணர், சைவர், தவ முனிவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் (அக்குழம்பு சுவை கண்டு உண்டனர்).

இன்னொரு அர்த்தம் பார்க்கும் முன் சில சொற்களின் பொருள்களைப்  பார்ப்போம்.

கொக்கு - மாமரம் 
சட்டி - சஷ்டி (ஆறாவது நாள் - சஷ்டி)
சாறு - திருவிழா 

இப்பொழுது அப்பாடலை மீண்டும் படியுங்கள்:
ஆறுநாட் கூடீ ஒருகொக்குப்பட்ட
   தகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
   தாமும்கொண்ட டார்சைவர் தாமும்கொண் டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்

ஆறாவது நாள் - சஷ்டியில்/சட்டியில், கொக்கினை -மாமரம் வடிவம் கொண்ட சூரனை, வீழ்த்தி, அதை சாறாக - திருவிழாவாக வைத்தான். அதை எல்லோரும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர்.

### சிலேடை.

காமனார் தமக்கும் இவர் மாமனார்

"திருக்குற்றால குறவஞ்சியில் "காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே! (குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்)" என்று வருகிறதே, இது பற்றிய புராணக்கதை கேட்ட நினைவில்லை, உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்" என்று நண்பர் சொக்கன் அவர்களைக் கேட்டிருந்தேன்.

அவர் சொன்ன ஊகத்தின் அடிப்படையிலான விளக்கம் இதோ:
காமனின் தந்தை விஷ்ணு, அந்த விஷ்ணுவின் சகோதரி உமை, ஆக காமனுக்கு அத்தை, அந்த உமையின் கணவர் சிவன், ஆகவே, மாமன், மரியாதை கருதி மாமனார்... இப்படிக் கருதலாமா? (மதனை உயிர்ப்பித்ததால் தந்தையாகக்கூடக் கருதலாம் :)). இது ஊகம்தான் 🙂 விளக்கமில்லை.