ஒரு வெண்பா எழுத தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைகள்:
- எழுத்து
- குறில் - ஒரு மாத்திரை கால அளவு
- நெடில் - இரு மாத்திரை கால அளவு
- மெய் - அரை மாத்திரை கால அளவு
- ஔகாரக் குறுக்கம் - ஒன்றரை மாத்திரை (முதலெழுத்தாக மட்டுமே வரும் போது)
- ஐகாரக் குறுக்கம் - ஒன்றரை மாத்திரை (முதலெழுத்தாக வரும் போது), ஒரு மாத்திரை (இடையிலோ இறுதியிலோ வரும் போது)
- குற்றியலிகரம், குற்றியலுகரம் - அரை மாத்திரை
- மகரக்குறுக்கம் - மகர மெய் குறுக்கம் - கால் மாத்திரை
- ஆய்தக்குறுக்கம் - கால் மாத்திரை
- அசை
- நேரசை - ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை.
- குறில்
- குறில் + மெய்
- நெடில்
- நெடில் + மெய்
- நிரையசை - குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும், இவ்விரண்டின் பின் மெய் எழுத்து வருவதும் நிரை அசை.
- இரு குறில்கள்
- இரு குறில்களும் மெய்யெழுத்தும்
- குறிலும் நெடிலும்
- குறிலும் நெடிலும் மெய்யெழுத்தும்
- சீர்
- ஓர் அசைச் சீர்
- நேர் = நாள்
- நிரை = மலர்
- நேர் + குற்றியலுகரம் (நேர்பு) = காசு (ஈற்று சீராக மட்டும் வரும்)
- நிரை + குற்றியலுகரம் (நிரைபு) = பிறப்பு (ஈற்று சீராக மட்டும் வரும்)
- ஈரசைச் சீர் - இயற்சீர் / ஆசிரியச்சீர் / ஆசிரிய உரிச்சீர் / அகவற்சீர்
- நேர் + நேர் = தே.மா
- நேர் + நிரை = புளி.மா
- நிரை + நேர் = கூ.விளம்
- நிரை + நிரை = கரு.விளம்
- மூவசைச் சீர் - உரிச்சீர்
- காய்ச்சீர் :
- நேர் + நேர் + நேர் = தே.மாங்.காய்
- நேர் + நிரை + நேர் = புளி.மாங்.காய்
- நிரை + நேர் + நேர் = கூ.விளங்.காய்
- நிரை + நிரை + நேர் = கரு.விளங்.காய்
- கனிச்சீர்
- நேர் + நேர் + நிரை = தே.மாங்.கனி
- நேர் + நிரை + நிரை = புளி.மாங்.கனி
- நிரை + நேர் + நிரை = கூ.விளங்.கனி
- நிரை + நிரை+ நிரை = கரு.விளங்.கனி
- நாலசைச் சீர் - பொதுச்சீர்
- தண்பூ - கடைசி இரு சீர்கள் - நேர் (தண்) + நேர் (பூ)
- நேர் + நேர் + நேர் + நேர் = தே.மாந்.தண்.பூ
- நேர் + நிரை + நேர் + நேர் = புளி.மாந்.தண்.பூ
- நிரை + நேர் + நேர் + நேர் = கூ.விளந்.தண்.பூ
- நிரை + நிரை + நேர் + நேர் = கரு.விளந்.தண்.பூ
- தண்ணிழல் - கடைசி இரு சீர்கள் - நேர் (தண்) + நிரை (நிழல்)
- நேர் + நேர் + நேர் + நிரை = தே.மாந்.தண்.ணிழல்
- நேர் + நிரை + நேர் + நிரை =புளி.மாந்.தண்.ணிழல்
- நிரை + நேர் + நேர் + நிரை = கூ.விளந்.தண்.ணிழல்
- நிரை + நிரை + நேர் + நிரை = கரு.விளந்.தண்.ணிழல்
- நறும்பூ - கடைசி இரு சீர்கள் - நிரை (நறும்) + நேர் (பூ)
- நேர் + நேர் + நிரை + நேர் = தே.மா.நறும்.பூ
- நேர் + நிரை + நிரை + நேர் = புளி.மா.நறும்.பூ
- நிரை + நேர் + நிரை + நேர் = கூ.விள.நறும்.பூ
- நிரை + நிரை+ நிரை+ நேர் = கரு.விள.நறும்.பூ
- நறுநிழல் - கடைசி இரு சீர்கள் - நிரை (நறும்) + நிரை (நிழல்)
- நேர் + நேர் + நிரை + நிரை = தே.மா.நறு.நிழல்
- நேர் + நிரை + நிரை + நிரை = புளி.மா.நறு.நிழல்
- நிரை + நேர் + நிரை + நிரை = கூ.விள.நறு.நிழல்
- நிரை + நிரை+ நிரை + நிரை = கரு.விள.நறும்.பூ
- தளை
- செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை.
- நிலைச் சீர் - வருஞ் சீர்
- இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.
- ஆசிரியத்தளை - ஆசிரியப்பாவிற்கு உரியது
- நேர் ஒன்றா ஆசிரியத்தளை
- மா முன் நேர் வரின்
- நிரை ஒன்றா ஆசிரியத்தளை
- விள முன் நிரை வரின்
- வெண்டளை - வெண்பாவிற்கு உரியது
- இயற்சீர் வெண்டளை
- மா முன் நிரை வரின்
- விள முன் நேர் வரின்
- வெண்சீர் வெண்டளை
- காய் முன் நேர் வரின்
- கலித்தளை - கலிப்பாவிற்கு உரியது
- காய் முன் நிரை வரின்
- வஞ்சித்தளை - வஞ்சிப்பாவிற்கு உரியது
- நிலைச்சீர் கனி
- ஒன்றிய வஞ்சித்தளை
- கனி முன் நிரை வரின்
- (நிலைச்சீரில் ஈற்றசை நிரை - வருஞ்சீரில் நிரை - ஒன்றிய)
- ஒன்றா வஞ்சித்தளை
- கனி முன் நேர் வரின்
- (நிலைச்சீரில் ஈற்றசை நிரை - வருஞ்சீரில் நேர் - ஒன்றா)
- அடி
- இரண்டு சீர் அடி - குறளடி
- மூன்று சீர் அடி - சிந்தடி
- நான்கு சீர் அடி - அளவடி
- ஐந்து சீர் அடி - நெடிலடி
- ஆறு/ஏழு/எட்டு சீர் அடி - கழிநெடிலடி
- ஒன்பது/பத்து சீர் அடி - இடையாகு கழி நெடிலடி
- பதினொன்று முதல் பதினாறு வரை சீர்கள் கொண்ட அடி - கடையாகு கழி நெடிலடி
- தொடை
- மோனை - சீர் மோனை, அடி மோனை
- முதல் சீரின் முதல் எழுத்தோடு அடுத்து வரும் சீர்களில் ஒன்றிலோ பலவற்றிலோ உள்ள முதல் எழுத்து ஒன்றி வருவது.
- தனி உயிர்க்கு தனி உயிரே மோனையாக வரும்.
- அ - ஆ - ஐ - ஔ
- இ - ஈ - எ - ஏ
- உ - ஊ - ஒ - ஓ
- ஒரு குறிப்பிட்ட மெய் மேல் ஏறிய உயிருக்கு அதே மெய் மேல் ஏறிய உயிரே மோனையாக வரும். விலக்குகள்:
- ச - த
- ஞ - ந
- ம - வ
- எதுகை - சீரெதுகை, அடியெதுகை
- சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க, இரண்டாம் எழுத்து முதலிய மற்ற எழுத்துக்கள் ஒலி ஒத்து வருவது.
- இயைபு
- அடியின் இறுதி (கடைசி சொல்லோ கடைசி எழுத்தோ) ஒன்றி வருவது.
- முரண்
- அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுவது.
- அளபெடை
- எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை
- அந்தாதி
- ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை.
- அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
- எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி.
- இரட்டைத் தொடை
- செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும்.
- எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.
- செந்தொடை
- மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது
- தொடை விகற்பங்கள்
- எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் “விகற்பங்கள்” எனப்படுகின்றன.
- மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.
- அடி
- இணை (1,2 சீர்களில் வருதல்),
- பொழிப்பு (1,3 சீர்களில் வருதல்),
- ஒரூஉ (1,4 சீர்களில் வருதல்),
- கூழை (1,2,3 சீர்களில் வருதல்),
- மேற்கதுவாய் (1,3,4 சீர்களில் வருதல்)
- கீழ்க்கதுவாய் (1,2,4 சீர்களில் வருதல்)
- முற்று (1,2,3,4 சீர்களில் வருதல்)
- மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.
வெண்பாவிற்கான இலக்கணம்:
- வெண்பா
- செப்பலோசை
- இயர்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை
- குறள் வெண்பா
- ஈரடிகள்
- முதல் அடியில் நான்கு சீர்களும் (அளவடி), இரண்டாவது அடியில் மூன்று சீர்கள் (சிந்தடி)
- சிந்தியல் வெண்பா
- மூவடிகள்
- முதல் இரண்டு அடிகள் அளவடி, ஈற்றடி சிந்தடி
- இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- தனிச்சொலின்றி
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று
- நேரிசை வெண்பா
- நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
- இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
- நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.
- இன்னிசை வெண்பா
- நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள்.
- பஃறொடை வெண்பா
- நான்கு அடிகளுக்கு மேல் அதிகப்பட்சம் பன்னிரண்டு அடிகள் வரை அமைந்த வெண்பா
- பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு
- கலிவெண்பா
- பன்னிரண்டு அடிகளுக்கு மேல்.
- இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும்.
- இன்னிசைக் கலிவெண்பா
- பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும்.
- நேரிசைக் கலிவெண்பா
- இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும்தனிச்சொல்லும் பெற்று கண்ணி என்ற பெயரில் பலவாக வரும்.
- வெண்பா எழுதும் போது கவனிக்கவேண்டியவை விதிமுறைகள்
- வெண்பாவில் இயற்சீர் நான்கும் (தேமா புளிமா கருவிளம் கூவிளம்) வெண்சீர் நான்கும் (தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்) மட்டும் வரும்.
- ஈற்றடி சிந்தடியாகவும் (மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி) மற்ற அடிகள் அளவடிகளாகவும் (நான்கு சீர்கள் கொண்டது அளவடி) வரவேண்டும்.
- வெண்பாவின் அளவடிகளில் பொழிப்பு (1,3ஆம் சீர்களில்) மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ(1,4 ஆம் சீர்களில்) மோனையும் வரலாம்.
- சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும்.
- ஈற்றடியின் இறுதிச்சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைப் பெற்று முடிதல் வேண்டும்.
- குறள் வெண்பாவிற்கு சில தொடை தொடர்பான விதி தளர்த்தல்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக