திங்கள், 15 மே, 2017

முதல்/இடை/கடை மாணாக்கர்

நீங்க சொல்லுறதுக்கு நேர்மாறாக யாரவது ஒரு வேலையை செஞ்சா தாரளமாக " பன்னாடை"ன்னு திட்டலாம். கெட்ட வார்த்தையெல்லாம் இல்ல நல்ல தூயத்தமிழ் வார்த்தை தான் அது.
நாங்க விறகு அடுப்புல எளிதில் பற்ற வைக்க காய்ந்த தென்னை மட்டை(கீத்து) / பனைவோலை / பன்னாடையை முதலில் பற்ற வைத்து அதன் மேல் சுள்ளி (சின்ன) விறகு வைப்போம். பன்னாடை எளிதில் பற்றிக்கொள்ளுதே கற்பூரம் மாதிரி, கற்பூர புத்தின்னு பாராட்டுறோம் ஆனா ஏன் பன்னாடைன்னு திட்றோம்ன்னு புரியாம இருந்துச்சு இதை படிக்கும் வரை - 
"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."
பொருள்:
அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எருமை,பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.
விளக்கம்:
அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர் பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.
மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோம . அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.
ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக்கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்.

1 கருத்து: