திங்கள், 26 செப்டம்பர், 2016

வியாழன், 22 செப்டம்பர், 2016

விசும்பு

காலையில் வீட்டில் அபிராமி அந்தாதி ஒலித்துக் கொண்டிருந்தது,  நான் சமைத்துக் கொண்டிருந்தேன். ஒரு பாட்டில் "முருகு சுவை" என்றே வர, Murug என்றால் ஹிந்தியில் chicken :) ஆஹா, பட்டர் காலையிலே பட்டர் சிக்கனை நினைவு படுத்துறாரே என்று சிரித்துக்கொண்டேன். 

அதே பாடலில் விசும்பு என்று, "முருகு சுவை"க்கு முன்னே வரும், பட்டர் சிக்கனில் லயித்த மனம் அந்த விசும்பிற்கு முன்னம் வந்த சொற்களை தவறவிட்டுவிட்டது. 

விசும்பு - படித்த/தெரிந்த சொல் தான், ஆனால் பொருள் நினைவே வரவில்லை, திருக்குறளில் கூட வரும், குறளும் நினைவில் வரவில்லை, எவ்வளவு முயன்றும் பலன் இல்லை. ஒருவேளை "முருகு சுவையில்" ;) சிக்கிக்கொள்ளாமல் எல்லா சொற்களும் மனதில் பதிந்திருந்தால், பொருள் விளங்கியிருக்கும். 

வேலையெல்லாம் முடித்து விட்டு வந்து தேடிப் பார்த்தேன். இரு அருமையான திருக்குறள் இதோ - 

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.


குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் 
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.


சிந்தனையை தூண்டின அபிராமி அந்தாதி:
         பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
         ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
         சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
         சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.

சொல் விளையாட்டு - 2

மனமுடையார்; திடமனமுடையார் !!

மனமுடையார் - மனம் உடைந்து போகமாட்டார். யார்? திட மனமுடையார் - திண்மையான உரம் பெற்ற மனதினை உடையவர்கள்/கொண்டவர்கள்.

சொல் விளையாட்டு - 1

ஊறுகாய் காயத்துக்கு ஊறு!

- காயம் என்றால் உடல் - "காயமே இது பொய்யடா ... " :)
- ஊறு என்றால் கெடுதல். - ஊறு விளைவிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் இல்லையா.

என்றும் மூவா முகுந்தனுக்கு இளையவளே - அபிராமி ! அபிராமி!!

என்றும் மூவா முகுந்தனுக்கு இளையவளே
                               - அபிராமி அந்தாதி

இளையவளே - என்றால் என்றாவதொரு நாள் மூப்படையாலாம் இல்லையா.
என்றும் இளையவளே - என்றால் நீ மட்டும் எப்படி "என்றும் இளையவளாக" இருக்கமுடியும்னு யாராவது சண்டைக்கு வரலாம்  இல்லையா.
அதே "என்றும் மூவா முகுந்தனுக்கு இளையவளே" என்றால் எந்த பிரச்சனையும் இல்லை  :)

"அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்" என்கிற மாதிரி முகுந்தனுக்கு மூப்பு வந்தால் அபிராமியும் மூப்படையாலாம். ஏற்கனவே ஒருவன் மூப்படையாமல் இருக்கிறான் அதனால் இது ஒன்றும் புதிதில்லை.

அது நிற்க.

திடீரென்று பட்டர் ஏன் அபிராமியை இளையவளே என்று அழைக்கிறார்? அதற்கு முன் தான் "கறை கண்டவனுக்கு மூத்தவளே" என்கிறார். ஒருவேளை அபிராமி (பெண்ணல்லவா) வயதை அதிகமாக இருக்குமாறு சொன்னவுடன் கோவித்துக்கொள்வாளோ என்னமோ என்று உடனே இளையவளே என்கிறாரோ என்னமோ :)

இங்கு மூத்தவளே எனும் போது மேலானவள் என்றே பொருள் படும்படி வருமென்று எனக்கு தோன்றுகிறது. கறைகண்டவனுக்கு மூத்தவளே - நீலகண்டனுக்கே விசத்தை முறித்த மேலானவளே!

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

உழுவலன்பர்

ஒரு புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் அவர்தம் நண்பரைக் குறிப்பிட்டு நன்றி உரைக்கையில் நண்பரை "உழுவலன்பர்" எனக் குறிப்பிடுகிறார்.

உழுவல் என்றால் இங்கு - இடைவிடாத அன்பு, எழுமையுந் தொடரும் அன்பு என்ற பொருளில் வருகிறது.

எழுமையுந் தொடரும் அன்பினை / இடைவிடாத அன்பினை செலுத்தும் நண்பர் - A friend forever !

வெண்பா - முதல் முயற்சி

வெண்பா இலக்கணம் கற்றப் பின் அதையொட்டி எழுதிய முதல் பா  :

அறிந்தேன் இலக்கணம் யாப்பிசைக்க வேண்டுமென
தெளிந்தேன் தேர்ந்தேன் கசடற கற்று

[குறிப்பு - தெளிந்தேன் என வந்தால் வேண்டுமென - தெளிந்தேன் இடையே தளை தட்டும், ஆகையால் இந்த திருத்தம்]

அறிந்தேன் - நிரை நேர் - புளி.மா
இலக்கணம் - நிரை நிரை - கரு.விளம் - இயற்சீர் வெண்டளை
யாப்பிசைக்க - நேர் நிரை நேர் - கூ.விளம்.காய்  - இயற்சீர் வெண்டளை
வேண்டுமென - நேர் நிரை நேர் - கூ.விளம்.காய்  - வெண்சீர் வெண்டளை

தெளிந்தேன் - நிரை நேர் - புளி.மா
தேர்ந்தேன் - நேர் - நேர் - தே.மா
கசடற - நிரை நிரை - கரு.விளம் - இயற்சீர் வெண்டளை
கற்று - நேர்பு - காசு - இயற்சீர் வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை
4. ஈற்றுச்சீர் காசு.


### சொற்கள் எல்லாம் எங்க ஓடி ஒழிந்து கொண்டன எனத் தெரியவில்லை, படிக்க நன்றாக இல்லையென எனக்கு தெரிகிறது.  இருப்பினும் தளை தட்டாம முதலில் எழுதிப் பழக்கவேண்டுமென, காலம் கடத்தாமல் ஒரு முயற்சி எடுத்தேன்.


வெண்பா

ஒரு வெண்பா எழுத தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைகள்: 
  • எழுத்து 
    • குறில் - ஒரு மாத்திரை கால அளவு 
    • நெடில் - இரு மாத்திரை கால அளவு
    • மெய் - அரை  மாத்திரை கால அளவு
    • ஔகாரக் குறுக்கம் - ஒன்றரை மாத்திரை (முதலெழுத்தாக மட்டுமே வரும் போது)
    • ஐகாரக் குறுக்கம் - ஒன்றரை மாத்திரை (முதலெழுத்தாக வரும் போது), ஒரு மாத்திரை (இடையிலோ இறுதியிலோ வரும் போது)
    • குற்றியலிகரம், குற்றியலுகரம் - அரை மாத்திரை 
    • மகரக்குறுக்கம் - மகர மெய் குறுக்கம் - கால் மாத்திரை 
    •  ஆய்தக்குறுக்கம் - கால் மாத்திரை 
  • அசை
    • நேரசை - ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை.
      • குறில் 
      • குறில் + மெய் 
      • நெடில்
      • நெடில் + மெய் 
    • நிரையசை - குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும், இவ்விரண்டின் பின் மெய் எழுத்து வருவதும் நிரை அசை.
      • இரு குறில்கள் 
      • இரு குறில்களும் மெய்யெழுத்தும்
      • குறிலும் நெடிலும் 
      • குறிலும் நெடிலும் மெய்யெழுத்தும்
  • சீர் 
    • ஓர் அசைச் சீர் 
      • நேர் = நாள் 
      • நிரை = மலர் 
      • நேர் + குற்றியலுகரம் (நேர்பு) = காசு  (ஈற்று சீராக மட்டும் வரும்)
      • நிரை + குற்றியலுகரம் (நிரைபு) = பிறப்பு (ஈற்று சீராக மட்டும் வரும்)

    • ஈரசைச் சீர் - இயற்சீர் / ஆசிரியச்சீர் / ஆசிரிய உரிச்சீர் / அகவற்சீர் 
      • நேர் + நேர் = தே.மா 
      • நேர் + நிரை = புளி.மா 
      • நிரை + நேர் = கூ.விளம் 
      • நிரை + நிரை = கரு.விளம் 
    • மூவசைச் சீர் - உரிச்சீர்
      • காய்ச்சீர் :
        • நேர் + நேர் + நேர் = தே.மாங்.காய் 
        • நேர் + நிரை + நேர் = புளி.மாங்.காய் 
        • நிரை + நேர் + நேர் = கூ.விளங்.காய் 
        • நிரை + நிரை + நேர் = கரு.விளங்.காய் 
      • கனிச்சீர் 
        • நேர் + நேர் + நிரை = தே.மாங்.கனி 
        • நேர் + நிரை + நிரை = புளி.மாங்.கனி 
        • நிரை + நேர் + நிரை = கூ.விளங்.கனி 
        • நிரை + நிரை+ நிரை = கரு.விளங்.கனி 
    • நாலசைச் சீர் - பொதுச்சீர் 
      • தண்பூ - கடைசி இரு சீர்கள் - நேர் (தண்) + நேர் (பூ)
        • நேர் + நேர் + நேர் + நேர் = தே.மாந்.தண்.பூ 
        • நேர் + நிரை + நேர் + நேர் = புளி.மாந்.தண்.பூ 
        • நிரை + நேர் + நேர் + நேர் = கூ.விளந்.தண்.பூ 
        • நிரை + நிரை + நேர் + நேர் = கரு.விளந்.தண்.பூ 

      • தண்ணிழல் - கடைசி இரு சீர்கள் - நேர் (தண்) + நிரை (நிழல்)
        • நேர் + நேர் + நேர் + நிரை = தே.மாந்.தண்.ணிழல் 
        • நேர் + நிரை + நேர் + நிரை =புளி.மாந்.தண்.ணிழல்  
        • நிரை + நேர் + நேர் + நிரை = கூ.விளந்.தண்.ணிழல் 
        • நிரை + நிரை + நேர் + நிரை = கரு.விளந்.தண்.ணிழல்
        •  
      • நறும்பூ - கடைசி இரு சீர்கள் - நிரை  (நறும்) + நேர் (பூ)
        • நேர் + நேர் + நிரை + நேர் = தே.மா.நறும்.பூ 
        • நேர் + நிரை + நிரை + நேர் = புளி.மா.நறும்.பூ 
        • நிரை + நேர் + நிரை + நேர் = கூ.விள.நறும்.பூ 
        • நிரை + நிரை+ நிரை+ நேர் = கரு.விள.நறும்.பூ 

      • நறுநிழல் - கடைசி இரு சீர்கள் - நிரை  (நறும்) + நிரை (நிழல்)
        • நேர் + நேர் + நிரை + நிரை = தே.மா.நறு.நிழல் 
        • நேர் + நிரை + நிரை + நிரை = புளி.மா.நறு.நிழல் 
        • நிரை + நேர் + நிரை + நிரை = கூ.விள.நறு.நிழல் 
        • நிரை + நிரை+ நிரை + நிரை = கரு.விள.நறும்.பூ 

  • தளை 
    • செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை.
    • நிலைச் சீர் - வருஞ் சீர் 
    • இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.
    • ஆசிரியத்தளை - ஆசிரியப்பாவிற்கு உரியது 
      • நேர் ஒன்றா ஆசிரியத்தளை 
        • மா முன் நேர் வரின் 
      • நிரை ஒன்றா ஆசிரியத்தளை 
        • விள முன் நிரை வரின் 
    • வெண்டளை - வெண்பாவிற்கு உரியது
      • இயற்சீர் வெண்டளை 
        • மா முன் நிரை வரின் 
        • விள முன் நேர் வரின் 
      • வெண்சீர் வெண்டளை 
        • காய் முன் நேர் வரின் 
    • கலித்தளை - கலிப்பாவிற்கு உரியது
      • காய் முன் நிரை வரின் 
    • வஞ்சித்தளை - வஞ்சிப்பாவிற்கு உரியது
      • நிலைச்சீர் கனி 
      • ஒன்றிய வஞ்சித்தளை 
        • கனி முன் நிரை  வரின்  
        • (நிலைச்சீரில் ஈற்றசை நிரை - வருஞ்சீரில் நிரை  - ஒன்றிய) 
      • ஒன்றா வஞ்சித்தளை 
        • கனி முன் நேர் வரின்
        • (நிலைச்சீரில் ஈற்றசை நிரை - வருஞ்சீரில் நேர் - ஒன்றா)
  • அடி 
    • இரண்டு சீர் அடி - குறளடி 
    • மூன்று சீர் அடி - சிந்தடி 
    • நான்கு சீர் அடி - அளவடி 
    • ஐந்து சீர் அடி - நெடிலடி
    • ஆறு/ஏழு/எட்டு சீர் அடி -  கழிநெடிலடி 
    • ஒன்பது/பத்து சீர் அடி - இடையாகு கழி நெடிலடி
    • பதினொன்று முதல் பதினாறு வரை சீர்கள் கொண்ட அடி - கடையாகு கழி நெடிலடி
  • தொடை
    • மோனை - சீர் மோனை, அடி மோனை 
      • முதல் சீரின் முதல் எழுத்தோடு அடுத்து வரும் சீர்களில் ஒன்றிலோ பலவற்றிலோ உள்ள முதல் எழுத்து ஒன்றி வருவது.
      • தனி உயிர்க்கு தனி உயிரே மோனையாக வரும்.
        • அ - ஆ - ஐ - 
        • இ - ஈ - எ - ஏ 
        • உ - ஊ - ஒ - ஓ 
      • ஒரு குறிப்பிட்ட மெய் மேல் ஏறிய உயிருக்கு அதே மெய் மேல் ஏறிய உயிரே மோனையாக வரும். விலக்குகள்:
        • ச - த 
        • ஞ - ந 
        • ம - வ 
    • எதுகை - சீரெதுகை, அடியெதுகை 
      • சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க, இரண்டாம் எழுத்து முதலிய மற்ற எழுத்துக்கள் ஒலி ஒத்து வருவது.
    • இயைபு 
      • அடியின் இறுதி (கடைசி சொல்லோ கடைசி எழுத்தோ) ஒன்றி வருவது.
    • முரண்
      • அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுவது. 
    • அளபெடை 
      • எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை
    • அந்தாதி
      • ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை.
      • அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
      • எழுத்தந்தாதி, அசையந்தாதிசீரந்தாதிஅடியந்தாதி.
    • இரட்டைத் தொடை
      • செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். 
      • எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம். 
    • செந்தொடை 
      • மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது
  • தொடை விகற்பங்கள் 
    • எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் “விகற்பங்கள்” எனப்படுகின்றன.
    • மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.
      • அடி
      • இணை (1,2 சீர்களில் வருதல்),
      • பொழிப்பு  (1,3 சீர்களில் வருதல்),
      • ஒரூஉ (1,4 சீர்களில் வருதல்),
      • கூழை (1,2,3 சீர்களில் வருதல்),
      • மேற்கதுவாய்  (1,3,4 சீர்களில் வருதல்)
      • கீழ்க்கதுவாய் (1,2,4 சீர்களில் வருதல்)
      • முற்று (1,2,3,4 சீர்களில் வருதல்)
    • மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.

வெண்பாவிற்கான  இலக்கணம்:
  • வெண்பா
    • செப்பலோசை 
    • இயர்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை
    • குறள் வெண்பா 
      • ஈரடிகள்
      • முதல் அடியில் நான்கு சீர்களும் (அளவடி), இரண்டாவது அடியில்  மூன்று சீர்கள் (சிந்தடி)
    • சிந்தியல் வெண்பா 
      • மூவடிகள் 
      • முதல் இரண்டு அடிகள் அளவடி, ஈற்றடி சிந்தடி 
      • இன்னிசைச் சிந்தியல் வெண்பா
        • தனிச்சொலின்றி
      • நேரிசைச் சிந்தியல் வெண்பா
        • இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று
    • நேரிசை வெண்பா
      • நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
      • இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
      • நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.
    • இன்னிசை வெண்பா 
      • நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள்.
    • பஃறொடை வெண்பா
      • நான்கு அடிகளுக்கு மேல் அதிகப்பட்சம் பன்னிரண்டு அடிகள் வரை அமைந்த வெண்பா
      • பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு 
    • கலிவெண்பா
      • பன்னிரண்டு அடிகளுக்கு மேல்.
      • இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். 
      • இன்னிசைக் கலிவெண்பா 
        • பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். 
      • நேரிசைக் கலிவெண்பா
        • இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும்தனிச்சொல்லும் பெற்று கண்ணி என்ற பெயரில் பலவாக வரும்.


  • வெண்பா எழுதும் போது கவனிக்கவேண்டியவை விதிமுறைகள் 
    • வெண்பாவில் இயற்சீர் நான்கும் (தேமா புளிமா கருவிளம் கூவிளம்) வெண்சீர் நான்கும் (தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்) மட்டும் வரும்.
    • ஈற்றடி சிந்தடியாகவும் (மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி) மற்ற அடிகள் அளவடிகளாகவும் (நான்கு சீர்கள் கொண்டது அளவடி) வரவேண்டும்.
    • வெண்பாவின் அளவடிகளில் பொழிப்பு (1,3ஆம் சீர்களில்) மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ(1,4 ஆம் சீர்களில்) மோனையும் வரலாம். 
    • சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும்.
    • ஈற்றடியின் இறுதிச்சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைப் பெற்று முடிதல் வேண்டும்.
    • குறள் வெண்பாவிற்கு சில தொடை தொடர்பான விதி தளர்த்தல்கள் உள்ளன.

வியாழன், 1 செப்டம்பர், 2016

திருடன்

திருடனுக்கு "அர்" விகுதி போட்டு திருடர் என மரியாதை செய்தவர் யார்?

பன்மையில் திருடன்கள் என குறித்தாலே போதாதா?

ஒரு பெயர்ச்சொல்லுக்கு - "கள்" விகுதி சேர்த்தா அது பன்மையைக் குறிக்கும்; "அர்" விகுதி சேர்த்தா அது உயர்திணைக்கான மரியாதையைக் குறிக்கும்; "அர்கள்" விகுதி சேர்த்தா அது மரியாதைப் பன்மையைக் குறிக்கும்.

மனிதனா பிறந்த ஒரே காரணத்திற்காக எல்லாம் உயர்திணையில் சேர்த்துக்கொள்ள முடியாது.

திருடர், திருடர்கள் - என்பன எல்லாம் ரொம்பவே அதிகமாகத் தெரியல?

உன்னோடான ஒவ்வொரு சண்டையிலும் ....

நான் மௌன போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் போதும் காதுகளை திறந்து தான் வைத்திருக்கிறேன். அது உனக்கு தெரியுமா?

~ * ~ * ~

அருகிருந்து பார்க்கும் போது பூதாகாரமாக தெரியும் சிறு புள்ளி, தூர வைக்கும் போது புலப்படாமல் போவது போலத் தான் உன் மீதான என் கோபங்களும்.

~ * ~ * ~

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நபர் என் துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் போதும் மனம் ஏனோ தான் எதிர்பார்த்த நபரையே தேடி அலைகிறது.

~ * ~ * ~

நிலையில்லாமல் தவிக்கும் மனம் எப்படியோ ஒரு சில நினைவுகளில் அப்படியே அடங்கிவிடுகிறது.

~ * ~ * ~

வார்த்தைகள் தீர்ந்து விட்ட கணங்களிலும் உன் மௌனத்தோடு மட்டும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறேன்.



~ * ~ * ~

### இது_கவிதை_இல்லை, காதல்!

ஓர் Vs ஒரு

"ஒரு ஊர்ல ஒரு ..."

இப்படி நாம் நம் குழந்தைகளுக்கு கதைச் சொல்லும் போது  - நாம் ஓர் இலக்கணப் பிழையை நம்மை அறியாமலே நம் குழந்தைகளுக்கு கடத்திவிடுகிறோம்.

//படித்தது
தமிழில் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன. (அ முதல் ஒள முடிய). இவ்வெழுத்துகளுள் ஒன்று ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தால் அச்சொல்லின் முன் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க ஓர் பயன்படுத்த வேண்டும். 
- ஓர் அணில் 
- ஓர் இரவு 
- ஓர் உலகம் 
- ஓர் ஏடு 
- ஓர் ஐயம் 
என்று காண்க. 

உயிரன்றிப் பிற உயிர்மெய் முதலில் வருமானால் ஒரு சேர்க்க வேண்டும். 
(எ-டு) ஒரு வீடு, ஒரு தோட்டம், ஒரு பள்ளி.

This is similar to adding "an" instead of "a" for the words that start with vowels.

மொழிப்பற்று

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.....தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்றார் பாரதி.

அவருக்கு 32 மொழிகள் தெரியுமாம், இருப்பினும் தமிழே இனிமை என்றார்.

ஆனால் நமக்கு தமிழும் அரைகுறை ஆங்கிலமும் அரைகுறை (ஹே, நான் என்னைச் சொன்னேன் :)), இருப்பினும் தமிழர் இருவர் அலுவலகங்களில் பேசிக்கொள்வது ஆங்கிலத்திலேயே (பெரும்பாலும்), தொழிற்சார்ந்த பேச்சு இல்லாத போதிலும். நான் கூட இந்த வகையறா தான்.

இதே மற்ற மாநிலத்தவர்கள் (எ.கா. கன்னடம்/மலையாளம்/தெலுங்கு/ஹிந்தி பேசுபவர்கள்) தன் தாய்மொழியிலே பேசிக்கொள்வார்கள், மொழி தெரியாத மூன்றாம் நபர் இருப்பினும், தொழிற்சார்ந்த பேச்சின் ஊடும்.

அவர்களுக்கெல்லாம் இருக்கும் மொழிப்பற்று ஏன் நம்மிடம் இல்லை???

வீமபாகம்

நளபாகம் தெரியும், அது என்ன வீமபாகம். அதுவும் ஒரு ஆண் சமையல் செய்யும் கதை/கலை தான்.

வீமன் அஞ்ஞாதவாசத்தின் போது சமையல்காரானாய் இருந்தது நினைவுக்கு வருகிறது.

ஏன் நளன் பிரபலமடைந்த அளவு வீமன் ஆகவில்லை? யாரு மூத்தவர், வீமனா நளனா? signature dish எனப்படும் தனித்தன்மை வாய்ந்தஉணவு வகை எது?

யாரா/எதா இருந்தா என்ன, அந்த காலம் போல இந்த காலம் இல்ல. கலிகாலமா போச்சு, என்ன செய்ய, பொண்ணுங்கள(மட்டும்) சமைக்க சொல்லுறாங்க, too bad ;)

திருக்குற்றாலக் குறவஞ்சில வசந்தவல்லியினது அழகின் சிறப்புல வருது - "வீம பாகம்பெற்ற காமப் பாலுக்கொத்த சீனியாள்".